வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் மற்றும் தொழில்வான்மையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் அனைவருக்காகவும் அரசாங்கம் ஆற்றவேண்டிய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தந்து, பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்குகின்றனர். அறிவை அடிப்படையாக வைத்து பணியாற்றும் தொழில்வான்மையாளர்களும் இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டி தருகின்றனர். அவர்களது நலன்புரி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கும்போது அந்தந்த நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்தார். ஊவா மாகாணத்திற்கான குடிவரவு வள மத்திய நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.