தென் மாகாணத்தில் வைரஸ் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இம்மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் உரையாற்றுகையில் ;
“தற்போது தென் மாகாணத்தில் பரவி வரும் காய்ச்சலில் சிறுவர்களே பாதிக்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் முன்னரை விட இவர்களின் விகிதாசாரம் வெகுவாக குறைவடைந்துள்ளது. பெரியோர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்வதால் அவர்கள் விரைவில் குணமடைகின்றனர். இதன் மூலம் இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தென் மாகாண வைத்தியசாலைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகள், தேவையான ஊழியர்களை நாங்கள் வழங்கி வருகின்றோம். நிதியமைச்சினால் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நோயை விரைவில் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.” என தெரிவித்தார்
இதேவேளை இவ்வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் தெளிவுப்படுத்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாத்தறை ஊடகவியலாளர் அமைப்பினால் நேற்றைய தினம் துண்டு பிரசுரங்கள் இதனையொட்டி விநியோகிக்கப்பட்டன. அத்துடன் அவர்களுக்கு சுவாச பாதுகாப்புகளும் வழங்கப்பட்டன.