கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் 26 வயதுடைய இளைஞரென பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கையடக்கத்தொலைபேசியை பஸ்வண்டியினுள் வைத்துவிட்டு நடத்துனரிடம் முரண்பட்டபோதே கலேவல பொலிசார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது அவரிடம் 25.25 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேக நபர் பொலிசாரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அதன்போது குறித்த நபரை பொலிசார் சுற்றிவளைத்து கைதுசெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது கொழும்பிலிருக்கும் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருளை கடத்துவதற்கு தன்னை பயன்படுத்துவதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். பொருட்களை கொண்டு செல்லும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைக்கு தனக்கு பணம் வழங்கப்படுவதாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார். இதேவேளை இச்செயற்பாட்டை தான் நீண்டகாலமாக தொடர்ந்து வருவதாகவும் அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.