நாட்டின் தற்போதைய காலநிலையில் நாளை முதல் சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஓரளவு பலத்த காற்றுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கி.மீ வரையான பலத்த காற்று வீசும். மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வரையில் காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும். மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசம். கடல் கொந்தளிப்பாக காணப்படும். மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.