சிம்பாப்வே அதிபர் எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் புலவாயோ நகரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு ஒன்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த வைட் சிட்டி மைதானத்தில் இருந்து முனங்காக்வா வெளியேறும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதிபருக்கு காயம் உண்டாகவில்லை என்று அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். எனினும், மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது முன்னாள் அரசியல் ஆசானான ராபர்ட் முகாபே அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின், முனங்காக்வா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்தார்.
வரும் ஜூலை 30ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கவுள்ள தேர்தலுக்கு பரப்புரை செய்வதற்காக அவர் புலவாயோ நகருக்குச் சென்றார்.
“அதிபரைக் கொல்ல கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று அதிபரின் செய்தித்தொடர்பாளர் ஜார்ஜ் சரம்பா தெரிவித்துள்ளார்.
துணை அதிபர் கெம்போ மொகாதிக்கு இந்த குண்டுவெடிப்பில் காலில் காயம் ஏற்பட்டதாக ஜிம்பாப்வே ஹெரால்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.