கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் மற்றும் மாணிக்கக்கற்கள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளன. உகண்டா பிரஜையொருவரும் இலங்கை பிரஜையொருவரும் இவற்றை எடுத்துவர முயன்ற போது சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவை கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
63 வயதான உகண்டா பிரஜையொருவர் இன்று காலை 8.15 மணியளவில் விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரது பயணப்பையில் சூட்டுசுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 790 நீல மாணிக்கக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 80 இலட்சம் ரூபாவாகும். இலங்கை சுங்க திணைக்களத்தை சேர்ந்த உதவி சுங்க அத்தியட்சகர் ஆர்.எல். ஆரியசேனவினால் இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன. அத்துடன் இன்றைய தினம் இலங்கை பிரஜையொருவரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 37 வயதுடைய இவர் நேற்றிரவு சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் வருகை தந்தார். அவரிடம் இருந்து மூன்று தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டன. இவற்றின் நிறை 300 கிராம்கள் ஆகும். இவற்றின் பெறுமதி 27 இலட்சம் 25 ஆயிரம் ரூபாவாகும். பொருட்கள் ஏதுமற்ற பயணிகளுக்கான பகுதியின் ஊடாக இவர் வெளியேற முயன்ற போது சுங்க அத்தியட்சகரினால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன என மேலும் தெரிவித்தார்.