தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் பதுளை மாவட்டத்தின் சில இடங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு , மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மி.மீ அளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.புத்தளத்திலிருந்து நீர்கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறியளவில் மழை பெய்யக் கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது குறித்தபிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.