கொரிய போரில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்கள் 55 பேரின் உடைமைகள் அமெரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 1950 முதல் 1953ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற கொரிய போரின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாகினர். போருக்கு பின்னர் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்குமிடையில் பல ஆண்டுகளாக காணப்பட்ட பகை கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் பின்னர் மாற்றமடைந்தது.
குறித்த சந்திப்பின்போது வடகொரியா வசமுள்ள, கொரிய யுத்தத்தில் உயிர்நீத்த தமது நாட்டு வீரர்களின் உடைமைகளை மீள கையளிக்கவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியிருந்தார். இதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் இணக்கம் வெளியிட்டிருந்தார். குறித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வடகொரியா வசமிருந்த 55 அமெரிக்க வீரர்களின் உடைமைகளும் தென்கொரியாவிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் மீள கையளிக்கப்பட்டன. அவை உரிய இராணுவ மரியாதையின் பின்னர் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் உரிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அவை ஒப்படைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.