பசுமை எரிசக்தி வீரர் 2017ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகமும், மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சும் இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. மின்சக்தியை வீண்விரயமின்றி பயன்படுத்துதல் மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் புதிய ஆலோசனைகளை இனங்காண்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வர்த்தக நிறுவனங்கள் சார்பில் 80 க்கும் அதிகமானோர் போட்டியில் பங்கேற்றனர். இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் ஆலோசனைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதற் பரிசாக 10 மில்லியன் ரூபாவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டன. இரண்டாவது இடத்தை கைப்பற்றிய தியகல போய்ஸ் டவுண் குழுவுக்கு 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டன. மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்ட மட்டக்களப்பு மாநகர சபைக்கு 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.