கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீன நிறுவனம் ஒன்று நிதி வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்தி உண்மையா இல்லையா என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ தெளிவுப்படுத்த வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். வியாங்கொடயில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ அப்பத்திரிகைக்கு மான நஷ்டவழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவர் இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இச் செய்தியின் மூலம் அவருக்கு பெரும் கலங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் செய்தி தவறாக இருந்தால் அப்பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்துடன் அரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும். உண்மை தகவல்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய மிகவும் இன்றியமையாததாகும் என அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.